Published : 18 May 2018 12:01 PM
Last Updated : 18 May 2018 12:01 PM
கர்நாடக முதல்வராக எடியூரப்பா சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கைவாக்கெடுப்பு நடத்தி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆளுநர் வாஜுபாய் வாலா 15 நாட்கள் காலஅவகாசம் அளித்த நிலையில், உச்ச நீதிமன்றம் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்புநடத்த உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், எடியூரப்பா பதவி தப்புமா என்ற பீதி பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின.
இந்தச் சூழலில் நேற்றுமுன்தினம் இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, நேற்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதல்வராகப் பதவி ஏற்றார்.
எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்பை நிறுத்திவைக்கக் கோரி நேற்றுமுன்தினம் நள்ளிவரவில் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடைவிதிக்க உச்ச நீதின்றம் மறுத்துவிட்டது. அதேசமயம், ஆளுநரிடம் தனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி எடியூரப்பா தாக்கல் செய்த கடிதத்திந்நகலை 18-ம் தேதி காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய பாஜக வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சிக்ரி, நீதிபதி அர்ஜன் குமார் தலைமையிலான அமர்வுமுன் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜராகி இருந்தார். காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகினார்.
பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகல் ரோகத்கி, எடியூரப்பா ஆளுநரிடம் 15, 16ம் தேதிகளில் அளித்த இரு கடிதங்களையும் நீதிபதி முன் தாக்கல் செய்தார்.
மாநிலத்தில் பாஜகதான் தனிப்பெரும்கட்சியாக இருப்பதால், எங்களைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். பாஜக சட்டமன்றக் குழுத்தலைவராக எம்எல்ஏக்கள் என்னைத் தேர்வு செய்துள்ளார்கள் என எடியூரப்பா இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் எனத் முகல் ரோகத்கி தெரிவித்தார்.
அதேசமயம் கடிதத்தில் தங்களுக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்பது குறித்து எடியூரப்பா குறிப்பிடவில்லை. தனது ஆதரவு அளித்து வரும் எம்எல்ஏக்களின் பெயரையும் கடிதத்தில் குறிப்பிடவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என பாஜக தலைவர் எடியூரப்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருசிலர் ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார் என ரோகத்கி தெரிவித்தார்.
இதையடுத்து, கேள்வி எழுப்பிய நீதிபதி சிக்ரி, எந்த அடிப்படையில் பாஜக நிலையான அரசு அமைக்க முடியும் என்று ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த ரோகத்கி, பாஜக எம்எல்ஏக்கள் தவிர்த்து, சில காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களும் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்ததால், ஆளுநர் அழைத்தார் எனத்தெரிவித்தார்.
அப்போது பேசிய நீதிபதிகள், பெரும்பான்மை என்பது எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையிலானது. இங்கு எண்ணிக்கை மட்டும் பலமானது, வலுவானது. அப்படி இருக்கையில், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை அழைக்காமல் பாஜக அழைக்கப்பட்டது ஏன். அப்படி என்றால், நாளையே பாஜக பெரும்பான்மையை நீருபிக்க தயாராக இருக்கிறதா என்று கேட்டனர்.
அதற்கு முகல்ரோகத்தி பாஜகதான் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது என்றார், இதை ஏற்க மறுத்த நீதிபதி அர்ஜன் குமார், இதில் இருவிஷயங்கள் இருக்கின்றன.
ஒன்று ஆளுநர் முடிவை ஆய்வுக்கு உள்ளாக்க வேண்டும், அல்லது சட்டப்பேரவையில் பெரும்பான்மை நீருபிக்க உத்தரவிட வேண்டும். ஆனால், இதில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நீரூபிக்க உத்தரவிடுவதுதான் சரியான தேர்வு என்று தெரிவித்தார்.
அப்போது காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி வாதிடுகையில், பாஜக முதல்வர் எடியூரப்பா அளித்த கடிதத்தில் எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்ற தகவலும், அவர்களின் பெயரும் இல்லை.
ஆனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற கூட்டணி நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயாராக இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு போதுமான அளவு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர உத்தரவிட வேண்டும் என உத்தரவிடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், கர்நாடக சட்டப்பேரவைக்கு ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் ஒருவரை ஆளுநர் நியமித்ததும் செல்லாது என உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கேட்கப்பட்டது.
ஆனால், பாஜக வழக்கறிஞர் முகல் ரோகத்கி, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்குச் சிறிது கால அவகாசம் தேவை எனத் தெரிவித்தார்.
ஆனால் இதை மறுத்த நீதிபதிகள், கர்நாடகச் சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுக்கு நடத்த வேண்டும். எடியூரப்பா தனது பெரும்பான்மையை நீருபிக்க வேண்டும். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களுக்கு போதுமான பாதுகாப்பைக் கர்நாடக போலீஸ் டிஜிபி அளிக்கவேண்டும் என உத்தரவிட்டனர்
இதைப்படிக்க மறந்துடாதீங்க....
சித்தராமையாவை வீழ்த்திய மோடி – அமித்ஷா அஸ்திரங்கள்!
‘ஆபரேஷன் தாமரை’க்கு பதிலடி ‘ஆபரேஷன் கை’ பாஜக எம்எல்ஏக்களை இழுக்க காங்கிரஸ் திட்டம்
ஆளுநரை திரும்ப பெறுங்கள்: காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT