Published : 18 May 2018 08:06 AM
Last Updated : 18 May 2018 08:06 AM

ஆளுநரை திரும்ப பெறுங்கள்: காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத) இணைந்து ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரின.

ஆனால், தனிப்பெரும் கட்சி என்ற வகையில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் நேற்றுமுன்தினம் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் இந்த முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, காங்கிரஸும் மஜதவும் நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தன. ஆனால் தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், அந்த மனு மீது விசாரணை நடத்த ஒப்புக் கொண்டது. இதையடுத்து எடியூரப்பா நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டி, ஆளுநர் வஜுபாய் வாலாவை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

கடந்த 2011-ல் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்றது. அப்போது காங்கிரஸை சேர்ந்த பரத்வாஜ் ஆளுநராக இருந்தார். ஆளுநருக்கும் ஆளும் பாஜக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இதையடுத்து, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜகவும் மோடியும் வலியுறுத்தினர்.

அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி 2011-ம் ஆண்டு மே 19-ம் தேதி ட்விட்டரில், “நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்க கர்நாடக ஆளுநர் முயற்சிக்கிறார். ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார். ஆளும் பாஜக அரசு மீது அடக்குமுறையை கையாள்கிறார். எனவே, ஆளுநரை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரை செய்ய வேண்டும்” என பதிவிட்டிருந்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x