Published : 18 May 2018 08:01 AM
Last Updated : 18 May 2018 08:01 AM
கர்நாடகாவில் பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆபரேஷன் கை’ மூலம் பாஜக எம்எல்ஏக்களை தங்களது கட்சிக்கு இழுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவின் எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் 104 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள பாஜக, கடந்த 2008-ல் அரங்கேற்றிய ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.
இதற்கான வேலைகளை ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமான ஸ்ரீராமுலு, கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, முருகேஷ் நிரானி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே காங்கிரஸ் மாநிலத் தலைவர் பரமேஷ்வர் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் ‘ஆபரேஷன் கை’ என்ற திட்டத்தை அரங்கேற்ற முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் பாஜக எம்எல்ஏக்கள் 20 பேரை இழுக்க வியூகம் அமைத்துள்ளனர். ஆபரேஷன் கை மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாக்கும் பொறுப்பை டி.கே.சிவகுமாருக்கு வழங்கியுள்ளார்.
இதனால் டி.கே.சிவகுமார் முதல் கட்டமாக சுயேச்சையாக வென்ற சங்கர், நாகேஷ் ஆகிய இருவரையும் பாஜகவிடமிருந்து காங்கிரஸுக்கு இழுத்துள்ளார். அடுத்ததாக லிங்காயத் வகுப்பைச் சேர்ந்த எடியூரப்பா, ஒக்கலிகர்களை ஏமாற்றி வருவதாகக் கூறி, அந்த சமூகத்தைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்களை இழுக்க முயற்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் கூறும்போது, “பாஜகவைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு வருவதாக உறுதியளித்திருக்கிறார்கள் ” என்றார். இதனிடையே காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல், “லிங்காயத் பிரிவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் விரைவில் இணைவார்கள்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT