Last Updated : 20 May, 2018 03:36 PM

 

Published : 20 May 2018 03:36 PM
Last Updated : 20 May 2018 03:36 PM

பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தின் ஆசையை நிறைவேற்றிய தோனி

 

இந்திய பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தின் நீண்ட நாள் ஆசையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கூல் கேப்டன் எம்எஸ் தோனி நிறைவேற்றியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தீவிரமான ரசிகர் பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த். சர்வதேச ஆடவர் பாட்மிண்டன் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்து தற்போது சரிந்துவிட்டார். முதலிடத்தில் பிடித்ததற்காக, தோனி அவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

தற்போது தேர்வுக்குழுத் தலைவராக இருக்கும் எம்எஸ்கே பிரசாத்துக்கு விக்கெட் கீப்பிங்கில் அறிமுகப்படுத்திவிட்டது கிடாம்பி ஸ்ரீகாந்த் தந்தை கே.வி.எஸ். கிருஷ்ணன். கிடாம்பி ஸ்ரீகாந்தின் ஆசையை தோனியிடம் கூறியபோது, அவர் ஸ்ரீகாந்துக்கு ஒரு பரிசை அளித்துள்ளார்.

ஸ்ரீகாந்தின் அந்த ஆசை குறித்து எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:

கிரிக்கெட் உலகில் விக்கெட் கீப்பிங் பணியில் என்னை அறிமுகப்படுத்திவிட்டது ஸ்ரீகாந்தின் தந்தை. நான் குண்டூரில் இருந்து கிரிக்கெட் விளையாட வரும்போதிலிருந்து ஸ்ரீகாந்தை சிறுவயதில் இருந்தே எனக்கு தெரியும்.

ஒரு நாள் ஸ்ரீகாந்த் என்னிடம் தோனியிடம் இருந்து ஒரு பரிசு வாங்கித் தரும்படி என்னிடம் கேட்டார். அப்போது, நான் அவரிடம் நீ பாட்மிண்டன் போட்டியில் உலகிலேயே முதலிடத்துக்கு வா, அப்போது தோனியிடம் இருந்து பரிசு வாங்கித் தருகிறேன் என்று உறுதியளித்தேன். அதன்பின் கோபிசந்த் பாட்மிண்டன் அகாடெமியில் சேர்ந்து ஸ்ரீகாந்த் பயிற்சி பெற்று சர்வதேச பாட்மிண்டன் தர வரிசையில் ஸ்ரீகாந்த் முதலிடத்தைப் பிடித்தார். தற்போது தர வரிசையில் சரிந்துவிட்டால்கூட, முதலிடத்தில் சில மாதங்கள் இருந்தார்.

இதையடுத்து தோனியைச் சந்தித்து, ஸ்ரீகாந்தின் நீண்டநாள் ஆசையான தோனியின் கையால் பரிசு வாங்கிவர வேண்டும் என்பதைத் தெரிவித்தேன். இதைக் கேட்டு மகிழ்ந்த தோனி, உடனடியாக தன்னிடம் இருக்கும் பேட்டில் கையொப்பம் இட்டு, ஸ்ரீகாந்துக்கு பரிசாக தான் அளித்ததாக கொடுத்துவிடுங்கள் எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், நானும் சிறப்பாக பாட்மிண்டன் விளையாடுவேன். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றாலும்கூட, இந்திய பாட்மிண்டன் போட்டிகளை தீவிரமாக அவ்வப்போது கவனிப்பேன் என்று தோனி என்னிடம் தெரிவித்தார். இதையும் ஸ்ரீகாந்திடம் சொல்லிவிடுங்கள் எனத் தெரிவித்தார். இதையடுத்து, தோனி அளித்த பேட் பரிசை இந்திய ஸ்ரீகாந்திடம் அளித்தேன். இவ்வாறு எம்எஸ்கே பிரசாத் தெரிவித்தார். ஸ்ரீகாந்த் தோனி அளித்த பேட் பரிசை நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

தோனி அளித்த பரிசுக்கு நன்றி தெரிவித்து பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், தோனி உங்களின் பரிசுக்கு எனது நன்றிகள், உங்களின் பரிசைப் பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தை என்னால் விவரிக்க முடியவில்லை. என்னுடைய நாளை இது மகிழ்ச்சியுடையதாக்கிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

இதைப் படிக்கமறந்துடாதீங்க....

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x