Published : 12 May 2018 12:20 PM
Last Updated : 12 May 2018 12:20 PM

சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணமா?: தோனியின் விருப்பத்தை நிராகரித்த ஸ்டீபன் பிளெம்மிங்

பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யக்கோரியும், தன்னுடைய விருப்பத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் கூறியும் அதை நிராகரித்துவிட்டதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த ஆட்டத்தில், சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கையில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸில் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ஊடகங்களிடம் பேசுகையில், எனக்குக் களத்தில் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ய அதிகமான விருப்பம். ஆனால், எனது ஆசைக்குப் பயிற்சியாளர் ஸ்டீபன்பிளெமிங் தடைவிதித்துவிட்டார். பேட்டிங் வரிசையில் அதிகமான மாற்றத்தைக் கொண்டுவரக்கூடாது அது நிலைத்தன்மையை குலைத்துவிடும் என்று கூறிவிட்டார்.

ஆனால், என்னைப்பொறுத்தவரை தற்போது 4 வது அல்லது 5-வது வரிசையில் களமிறங்குகிறேன். ஆனால், ஒன்டவுனில் களமிறங்கி நீண்ட நேரம் விளையாடி ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், இதற்குப் பயிற்சியாளர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் எந்தவிதமான சோதனை முயற்சியும் செய்ய முடியாமல் இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 360 ரன்கள் குவித்துள்ளார். இவரின் சராசரி 90 ஆக இருக்கிறது. 4-வது அல்லது 5-வது வரிசையில் களமிறங்கிவரும் தோனி, இந்த சீசனில் 3 அரைசதங்கள்அடித்துள்ளார். ஒருவேளை தோனியின் விருப்பப்படி அவரை ஒன்டவுனிலோ அல்லது 2-வது வீரராகவோ களமிறக்கினால், களத்தில் நின்று விளையாடி அதிகமான ரன்களைச் சேர்க்க முடியும்.

5-வது வீரராக களமிறங்கும்போது, ஏறக்குறைய 15 ஓவர்களுக்கு மேல்தான் தோனி பேட் செய்கிறார். இதனால் நெருக்கடியான நேரத்தில், அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், இதன் காரணமாக விக்கெட்டுகளையும் இழக்க வேண்டியது இருக்கிறது. சிஎஸ்கே அணி அதிகமான ரன்குவிக்க தோனியின் ஆசை நிறைவேறாததும் ஒருவகையில் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தோனியின் பேட்டிங் திறமை மீதும், ரன் எடுக்கும் வேகம் குறித்தும் கடந்த ஆண்டு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால், அவர் ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2018 ஐபிஎல் சீசனில் பேட்டிங்கிலும், ரன் எடுக்கும் ஓட்டங்களிலும் தூள் பறத்தி வருகிறார். 36-வயதான ஒருவர் களத்தில் இந்த அளவுக்கு ஓட முடியுமா என்று வியக்கும் வகையில் உடற்கட்டை மாற்றி இருக்கிறார்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கால்காப்புடன் பவுண்டரி வரை ஓடி பீல்டிங் செய்து தனது ஓட்டத்திறனை தோனி நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை படிக்க மறந்துவிடாதீர்கள்...

சிஎஸ்கேவின் வெற்றிக்கு “செக்” வைத்த பட்லர்: “கூல் கேப்டன்” “ஹாட்”

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x