Last Updated : 21 May, 2018 12:04 PM

 

Published : 21 May 2018 12:04 PM
Last Updated : 21 May 2018 12:04 PM

‘அன்பையும், மதிப்பையும் என் தந்தை எனக்குக் கற்பித்துள்ளார்’: ராஜீவ் நினைவு நாளில் ராகுல் உருக்கம்

அனைவரிடமும் அன்புடன் இருக்க வேண்டும், மதிப்பு, மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல பண்புகளை என் தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளார் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவுநாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராகுல் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த போது, விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினரால் கொல்லப்பட்டார். ராஜீவ் கொல்லப்பட்ட 27-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

டெல்லியில் அமைக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர பூமியில் இன்று காலை சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரின் சகோதரி பிரியங்கா வத்ரா, அவரின் கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்பின் ராகுல் காந்தி ட்விட்டரில் ராஜீவ் காந்தியின் படத்தை வெளியிட்டு செய்தி வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

வெறுப்புணர்வை யார் கைக்கொண்டு இருக்கிறார்களோ, வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அது சிறையாக இருக்கும் என்று என் தந்தை எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறார். இன்று என் தந்தையின் 27-வது நினைவு தினம். எனக்கு அன்பையும், அனைவரிடமும் மதிப்புடன், மரியாதையுடன் பழகும் பண்பைக் கற்றுக்கொடுத்த என் தந்தைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தப் பண்புகள்தான் ஒரு தந்தை ஒரு மகனுக்கு அளிக்கும் விலைமதிப்பு மிக்க பரிசுகளாக இருக்கும். எங்களின் இதயத்தில் உங்களின் அன்பு என்றென்றும் பற்றிக்கொண்டிருக்கும்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளான இன்று அவரை மிகுந்த மரியாதையுடனும், பாசத்துடனும், அன்புடனும் நான் நினைவுகூர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்

 

இதை படிக்க மிஸ் பன்னிடாதீங்க...

'தல'ன்னா அஜித் மட்டும்தான்; தோனியெல்லாம் கீழே தான்: ஸ்ரீசாந்த் கருத்தால் சர்ச்சை

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x