Last Updated : 18 May, 2018 02:10 PM

 

Published : 18 May 2018 02:10 PM
Last Updated : 18 May 2018 02:10 PM

‘‘நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் வெற்றிபெறுவோம்’’- கர்நாடக முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் இருந்தும் அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அதில் எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க தடைவிதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஆளுநரிடம் அளித்த கடிதத்தின் நகலை 18-ம் தேதி காலை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்தச் சூழலில் நேற்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதல்வராகப் பதவி ஏற்றார். அவரை 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் அளித்து இருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி தலைமையிலான அமர்வு, நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா சட்டப்பேரவையில் பெரும்பான்மையையை நிரூபிக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு போதுமான பாதுகாப்பை போலீஸ் டிஜிபி வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் பெங்களூரில் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம், கட்டுப்படுகிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவோம், சட்டப்பேரவையில் எங்கள் பெரும்பான்மையை நீருபிப்போம். உடனடியாக தலைமைச் செயலாளருடன் கலந்துபேசி, சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான அலுவல்கள் தொடங்கும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் கூறுகையில், சட்டப்பேரவையில் நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறும். எங்களின் பெரும்பான்மையை நிரூபிப்போம் எனத் தெரிவித்தார்.

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x