Published : 18 May 2018 10:26 AM
Last Updated : 18 May 2018 10:26 AM

டிவில்லியர்ஸ் எடுத்த கேட்ச் ஸ்பைடர்மேன் திறமை: ஆச்சரியத்தில் விராட் கோலி

பின் தங்கியிருந்த ஆர்சிபி அணி சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸை அச்சுறுத்தும் விதமாக 12 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

அந்த அணியினரிடத்தில் காணப்படும் புதிய வெறி மற்ற அணிகளுக்கு கொஞ்சம் கதிகலக்கவே செய்யும். நேற்று 218 ரன்களை விளாசி 14 ரன்களில் வெற்றி பெற்றது, இந்நிலையில் ஒரு செட்டில்டு அணியாக ஆர்சிபி தன் பலத்தைக் கண்டுபிடித்துக் கொண்டது என்று விராட் கோலியே தெரிவித்து விட்டார்.

நேற்று அலெக்ஸ் ஹேல்ஸ் அபாயகர பார்மில் இருந்தார். முதலில் சவுதியை நேராக ஒரு சிக்ஸ். பிறகு உமேஷ் யாதவ் வேகத்திலும் ஒரு பவுண்டரி, ஒரு ஹெலிகாப்டர் சிக்ஸ், என்று கலக்கி வந்த போது டீப் ஸ்கொயர் லெக்கில் யாதவ்வின் இதே ஓவரில் சவுதி டைவ் அடித்து தரைதட்ட இருந்த பந்தை துல்லியமாக கேட்ச் எடுத்தார், நடுவருக்கு சந்தேகம் எனவே அவர் அவுட் என்று லேசாக கையை உயர்த்தினாலும் எதற்கும் 3ம் நடுவரை கேட்டுவிடலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் 3ம் நடுவர் பலரது அதிச்சிகளுக்கிடையே நாட் அவுட் என்றார்.

கோலி, சவுதி ஆர்சிபி ரசிகர்கள், தொலைக்காட்சி பார்வையாளர்கள் என்று அனைவருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும், மைக்கேல் கிளார்க் ’என்னால் நம்ப முடியவில்லை’ என்று வர்ணனையிலிருந்து கதறினார். கடைசியில் 37 ரன்களை எடுத்த ஹேல்ஸ், மொயின் அலி பந்தை ஒரு அடி எடுத்து வைத்து மிட்விக்கெட்டில் பொளேர் என்று அறைந்தார். பந்து சிக்சுக்குச் சென்று கொண்டிருக்கிறது. டிவில்லியர்ஸ் எம்பினார் பந்து காற்றில் சற்றே திரும்பியது டிவில்லியர்ஸ் விடவில்லை வலது கையை நீட்டி வானிலிருந்து பந்தைப் பறித்தார். அதி அற்புத கேட்ச். போல்ட் கோலிக்கு பிடித்த கேட்சுக்கு சவால் அளிக்கும் கேட்ச் ஆகும் இது. ஒட்டுமொத்த ஆர்சிபி அணியும் டிவில்லியர்ஸைப் பாராட்ட அவர் இடத்துக்குச் சென்றது.

ஆட்டம் முடிந்த பிறகு இந்த கேட்ச் பற்றி விராட் கோலி விதந்தோதிக் கூறும்போது, “அது ஒரு ஸ்பைடர்மேன் கேட்ச் ஆகும், சாதாரண மனிதர்களாக அந்த மாதிரியெல்லாம் கேட்ச் எடுக்க முடியாது” என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

அதே போல் அவரது பேட்டிங் பற்றி கூறும்போது, “அவரது ஷாட்கள் இன்னமும் கூட என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. பீல்டிங்கும் நம்ப முடியாத ரகத்தில் உள்ளது” என்றார்.

ஆட்டம் பற்றிக் கூறும்போது, “உணர்ச்சிகள் கட்டுக்குள்தான் இருக்கின்றன பிரச்சினைகள் இல்லை. இது போன்ற போட்டிகளை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். பவுலர்களுக்கு நியாயமாகப் பேச வேண்டும் அவர்களுக்கு எதுவும் எளிதல்ல. பனிப்பொழிவும் இருந்தது. ஆனாலும் அவர்கள் தங்கள் இயல்பு குலையாமல் வீசினர்.

இப்போது உத்வேகத்துடன் ராஜஸ்தானை எதிர்கொள்ளச் செல்கிறோம். ஏபி, கொலின், மொயின் அபாரம். இந்த 11 வீரர்களுடன் அணி செட்டில் ஆகிவிட்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் அணியின் பலத்தைப் பார்த்த எதிரணிகள் நாங்கள் வெற்றி பெற விரும்பியிருக்க மாட்டார்கள்” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x