Published : 11 May 2018 03:19 PM
Last Updated : 11 May 2018 03:19 PM
ஹரியாணாவின் குருகிராமில் பொது இடங்களில் தொழுகை நடத்திய முஸ்லிம்களுக்கு சிலர் தொந்தரவு கொடுத்ததையடுத்து வெள்ளிக்கிழமையான இன்று பலத்த பாதுகாப்புடன் தொழுகை நடந்தது. மொத்தம் 23 பொது இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது
ஹரியாணா மாநிலம், குருகிராம் பகுதியில் சமீபத்தில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கு ஹிந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சிலர் தொந்தரவு கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொழுகை சமயத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று அந்த அமைப்பினர் கோஷமிட்டனர். மேலும் வங்கதேசத்துக்கு திரும்பிச் செல்லுங்கள் என்றும் அவர்கள் கோஷத்தை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். இப்கோ சவுக், உத்யோக் விகார், லீஷர் வேலி பூங்கா, மால் மைல் பகுதிகளில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதைப் போலவே வாஜிரா கிராமத்தில் மைதானத்தில் தொழுகை நடத்தியவர்களுக்கும் ஹிந்துத்துவா அமைப்பினருக்கும் இடையே மோதல் நடந்தன. இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைதொடர்ந்து, மசூதிகளுக்குள் மட்டுமே தொழுகைகள் நடத்தப்படவேண்டும் என்று ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசினார். எனினும் இதுதொடர்பாக உத்தரவு எதையும் அவர் பிறப்பிக்கவில்லை.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை நடைபெற்றது. வழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. மொத்தம் 47 இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் தொழுகை நடந்தது. இதில் 23 இடங்கள் திறந்தவெளி பொது இடங்கள் ஆகும்.
தொழுகை நடைபெறுவதை போலீஸாருடன் சேர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளும் உறுதி செய்தனர். தொழுகையில் கலந்து கொண்டவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. சமூக விரோதிகள் யாரும் அங்கு நுழைந்து விடாமல் இருக்கும் பொருட்டு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
தங்களுக்கு சொந்தமான மைதானங்கள், பொது இடங்கள் என 23 இடங்கள் இருப்பதால், தொழுகைக்கு குறைவான அளவு பொது இடங்கள் இருந்தால் போதும் என வக்ப் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கோரிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று தொழுகை நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT