Published : 24 Nov 2016 01:34 PM
Last Updated : 24 Nov 2016 01:34 PM

திட்டமிட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை - நோட்டு உத்தி மீதான மன்மோகனின் 10 தெறிப்புகள்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், அதை செயல்படுத்தும் விதத்தில் உள்ள கோளாறுகளை சுட்டிக்காட்டியும் மாநிலங்களவையில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பேசியதன் 10 முக்கிய அம்சங்கள்:

* "ஊழல், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எதிர்க்கத்தக்கது அல்ல. ஆனால், ரூ.500, 1000 செல்லாது என்ற உத்தியை மத்திய அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்.

* ரூபாய் நோட்டு நடவடிக்கையை செயல்படுத்திய விதத்தால், ரிசர்வ் வங்கி மோசமான நிர்வாகத்துக்கு முன்னுதாரணம் ஆகிவிட்டது.

* அவசரகதி அறிவிப்புகள் பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மீது மக்கள் கொண்டுள்ள மதிப்பை குறைத்துவிடும்.

* மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையானது, திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை.

* காலம் கடந்துவிட்டாலும்கூட ஏழை மக்களின் துயர் துடைக்க இப்போதாவது பிரதமர் மோடி ஏதாவது நடைமுறைக்கு சாத்தியப்பட்ட நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்.

* மத்திய அரசு சொல்வது போல நோட்டு நடவடிக்கையின் தாக்கம் சீரடைய 50 நாட்கள் ஆகும் என்றால், இந்த 50 நாட்களும் சாமானிய மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்ற நிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

* ஒரு நாட்டின் மக்கள் வங்கிகளில் தாங்கள் செலுத்திய பணத்தையே எடுக்க முடியாத நிலை வந்துள்ளது யோசித்துப் பார்க்க முடியாத நிகழ்வு. உயர் மதிப்பு நோட்டுகளை முடக்கியுள்ள செயல், மக்கள் மத்தியில் ரூபாய் மீதும், வங்கிகள் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்யும்.

* நோட்டு நடவடிக்கையால் சாமானிய மக்கள் மட்டுமின்றி, அமைப்பு சாரா தொழில்கள், வேளாண் துறை, சிறு - குறு தொழில்கள், கூட்டுறவு சேவைகள் முடங்கியுள்ளன. இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

* மத்திய அரசின் இந்த நோட்டு நடவடிக்கையால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 2% வரை குறையலாம். நான் குறைவாக கணித்திருக்கிறேன். இதற்கும் அதிகமான அளவில்கூட ஜிடிபி குறைய வாய்ப்புள்ளது.

* நீங்கள் (மத்திய அரசு) சொல்வது போல் இது நீண்டகால நலத் திட்டம் எனில், எனக்கு நினைவுக்கு வரும் ஜான் கென்னியின் வார்த்தைகள்: "நாட்கள் நகர நாம் அனைவரும் செத்து மடிவோம்".

விரிவான செய்திக்கு >>மத்திய அரசின் மாபெரும் நிர்வாக தோல்வி: ரூபாய் நோட்டு உத்தி மீது மன்மோகன் சிங் சரமாரி தாக்கு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x