Published : 21 Jun 2019 03:24 PM
Last Updated : 21 Jun 2019 03:24 PM

ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம்

குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதவை முழுமையாக அகற்றுமாறு ஹாங்காங்கில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தலைமைக் காவல் நிலையத்தை சூழ்ந்துகொண்டு போராட்டம் நடத்தினர். 

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது ஹாங்காங். பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில், குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இதன்மூலம், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கப்படுவார்கள். மேலும், இந்த சட்டத் திருத்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியாக இருந்தார்.

ஆனால், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங்காங் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஹாங்காங்கில் பதற்றம் ஏற்பட்டது. உள்நாட்டுக் கலவரம் பெரிதாகும் சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கடந்த வாரம் அறிவித்தார்.

இந்நிலையில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை  முழுமையாக ரத்து செய்யுமாறு இன்று (வெள்ளிக்கிழமை) ஹாங்காங்கில் தலைமைக் காவல் நிலையத்தைப் போராட்டக்காரர்கள் சூழ்ந்துகொண்டு போராட்டம்  நடத்தினர்.

போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடுமாறும், போராட்டம் பொதுமக்களுக்கான தங்கள் பணிகளுக்கு இடையூறாக இருக்கிறது என்றும் போலீஸார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தொடர்ந்து ஹாங்காங்கில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x