Published : 12 Jun 2019 12:53 PM
Last Updated : 12 Jun 2019 12:53 PM
வட கொரிய அதிபரிடமிருந்து தனக்கு ஒரு அழகான கடிதம் ஒன்று வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சின்குவா செய்தி ஊடகம் தெரிவித்துள்ள விவரம்:
ஐயோவா புறப்படுவதற்கு முன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், தனக்கு கிம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அக்கடிதத்தில் அவர் தனக்கு மிகவும் இதமான வார்த்தைகளில் அன்பான முறையில் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அது ஒரு அழகான நல்ல கடிதம் என்றும் ட்ரம்ப் மகிழ்ச்சியோடு கூறினார். எனினும் கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று அவர் தெரிவிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்ட்டஸ் தொடர்ந்து கூறியதாவது:
''கிம் உடனும் திறன்மிக்க வடகொரியாவுடனும் தனது உறவை மேலும் நன்றாக வைத்துக்கொள்வதை தொடர்ந்து ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். கொரிய தீபகற்ப அணுகுமுறை பற்றி விவாதிக்க ஜூன் கடைசியில் ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளைச் சேர்ந்த இரு தலைவர்களையும் சந்திக்க வேண்டும் என்று ட்ரம்ப் மற்றும் அவரது செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை வலியுறுத்தும். தடை நீக்கப்படாது என்றாலும் வடகொரியாவுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையை வாஷிங்டன் உறுதியாக மேற்கொள்ளும்''.
இவ்வாறு வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரியில், வியட்நாமிய தலைநகரான ஹனோய் நகரில் ட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோருடைக்கிடையே நடைபெற்ற இரண்டாவது சந்திப்பின்போது அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT