Published : 22 May 2019 12:40 PM
Last Updated : 22 May 2019 12:40 PM

சவுதி விமான நிலையம் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

சவுதி விமான நிலையத்தின் மீது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து சவுதி அரசின் செய்தித் தொடர்பாளர், ''சவுதி -ஏமன் எல்லையோரத்தில் நஜ்ரன் நகரில் அமைந்துள்ள விமான நிலையத்தில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தினர்'' என்றார்.

இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவலை சவுதி அரசு தெரிவிக்கவில்லை.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இதில் கடந்த சில மாதங்களாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x