Published : 24 Apr 2019 06:06 PM
Last Updated : 24 Apr 2019 06:06 PM

இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர், ஐஜிபி ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் வலியுறுத்தல்

இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் மற்றும் ஐஜிபி (காவல்துறை தலைவர்) ஆகியோரை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் சிறிசேனா வலியுறுத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தேவாலயக் கட்டிடத்தின் சில பகுதிகள் வெடித்துச் சிதறின.

இந்தக் குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களைக் குறிவைத்து தொடர்ந்து 8 இடங்களில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 359 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்யும்படி இலங்கை அதிபர் சிறிசேனா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சண்டே டைம்ஸ், ''இலங்கை அதிபர் சிறிசேனா ஐஜிபி ஜெயசுந்தரா மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் ஃபெர்னாண்டோ ஆகியோரை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புத் துறை செயலாளர் பதவிக்கு ராணுவ தளபதி தயா ரத்னாயக்கே பெயர் ஆலோசிக்கப்படுகிறது'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்புத் துறையில் 24 மணி நேரத்துக்குள்ளாக அதிபர் சிறிசேனா மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x