Published : 24 Apr 2019 05:37 PM
Last Updated : 24 Apr 2019 05:37 PM

நாங்கள் எதிரிகள் அல்ல: தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அச்சத்தில் இலங்கை முஸ்லிம்கள்

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்பு காரணமாக அங்குள்ள முஸ்லிம்கள் அச்சத்தில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தேவாலயக் கட்டிடத்தின் சில பகுதிகள் வெடித்துச் சிதறின.

இந்தக் குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களைக் குறிவைத்து தொடர்ந்து 8 இடங்களில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 359 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அங்குள்ள் இஸ்லாம் அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்துள்ள அதே நேரத்தில் அங்குள்ள இஸ்லாமியர்களிடம் அச்சம் நிலவி வருகிறது.இதன் காரணமாக பலர் வெளியே செல்லாமால் மசூதிகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சரினா பேகம் என்ற பெண்மணி பேசும்போது, ''எனக்குத் தெரியும் மக்கள் முஸ்லிம்கள் மீது கோபமாக இருப்பார்கள். இந்தத் தாக்குதல் நடத்தியவர்கள் இவ்வளவு வெறுப்பு மிக்கவர்களாக இருந்திருப்பார்கள் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். நான் வெளியில் செல்வதற்கு அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது'' என்றார்.

அமீர் என்பவர் பேசும்போது, ''நாங்கள் தொடர்ந்து அச்சத்தில் இருக்கிறோம். எங்களது மத அடையாளத்தைக் கண்டு அவர்கள் எதிரிகளாக நினைப்பார்கள். நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல. இது எங்களின் தாய் நாடு. இது ஆசியாவின் முத்து என்று அறியப்படுகிறது. இதையே நாங்களும் விரும்புகிறோம்'' என்று கூறினார்.

இலங்கையின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக புத்த மதத்தினர் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், முஸ்லிம்களும் உள்ளனர். கிறிஸ்தவர்கள் 7% உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x