Last Updated : 20 Apr, 2019 01:58 PM

 

Published : 20 Apr 2019 01:58 PM
Last Updated : 20 Apr 2019 01:58 PM

குழந்தைகளை சித்ரவதை செய்த அமெரிக்கப் பெற்றோர்கள்: திகில் வீடு வழக்கில் ஆயுள் தண்டனை

தங்கள் 12 குழந்தைகளை வீட்டுச் சிறையில் அடைத்து சித்ரவதை புரிந்ததாக 'வன்கொடுமை திகில் வீடு'  என்றழைக்கப்படும் வழக்கு ஒன்றில் அமெரிக்கப் பெற்றோர் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சியளிக்கும் அதிபயங்கரமான வழக்கு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

டேவிட் ஆலென் டர்பின் (57) மற்றும் அவரது மனைவி லூயீஸ் அன்னா டர்பின் (50) ஆகிய இருவரும் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர்கள். கொடுமைக்கு ஆளான இக்குழந்தைகள் தென்கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து 112 கி.மீ . தொலைவில் உள்ள பெர்ரிஸ் நகரில் வசித்து வந்தனர். அக்குழந்தைகளில் ஒருவரான 17 வயது இளைஞர் ஜன்னல் வழியாக தப்பி வந்து எமர்ஜென்ஸி சர்வீஸுக்குத் தகவல் அளித்த பிறகே இப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.

இவர்களுடைய 13 குழந்தைகளில் 12 பேருக்கு 14 வகையான கொடுமைகளைச் செய்ததாக, அதாவது குரூரமாக குழந்தைகளை நடத்தியது, வீட்டையே சிறையாக்கி அடைத்து வைத்தது, குழந்தைகள் மீதான துன்புறுத்தல், கொடுமை செய்தல் உள்ளிட்ட குற்றங்களைச் செய்ததாக அப்பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர்.

பெற்றோரிடம் நடத்தப்பட்ட கடுமையான விசாரணையின்போது கூட அப்போது குழந்தைகள் தங்கள் பெற்றோரை இப்பொழுதும் நேசிப்பதாக கூறியதுதான் இதில் உள்ள ஆச்சரியம்.

இவ்விருவரும் 25 ஆண்டுகள் தண்டனை அடைந்த பிறகே பரோல் உள்ளிட்ட சலுகைகள் பெறத் தகுதியுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

''உண்மையில் குழந்தைகளை கொடுமைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைத்ததில்லை. ஆனால் எங்கள் கண்டிப்பினால் குழந்தைகளுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டிருந்தால் நிச்சயம் நான் அதற்காக வருந்துகிறேன்'' என்று குழந்தைகளின் தந்தை டேவிட் டர்பின் தெரிவித்தார்.

விசாரணையில் டர்பின் தம்பதிகள் இருவரும் கண்ணீரில் நனைந்தபடியே பதிலளித்தனர். இரு குழந்தைகள் நீதிமன்ற கூண்டில் வந்து பேசியபோது அவர்கள் இருவரின் கண்களும் நடுங்கி அதிர்ச்சியில் உறைந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x