Published : 11 Apr 2019 06:29 PM
Last Updated : 11 Apr 2019 06:29 PM
ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.
ஏமன் தலைநகர் சனாவில் பள்ளிக்கூடம் அருகே சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் பலர் பலியாகினர். பொதுமக்கள் 54 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் பலரும் 9 வயதுக்குள்ளானவர்கள். இன்னும் பல குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஜனவரி மாதத்திலிருந்து ஏமனில் நடந்த வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கூடத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டு தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.
இரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறுமி ஒருவர் கூறும்போது, ''எனது தங்கை ஏதும் செய்யவில்லை. அவள் மீது எந்தத் தவறும் இல்லை. எந்த சூழ் நிலை இருந்தாலும் அல்லா இதற்கான பதிலடியை கொடுப்பார்'' என்றார்.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்தது.
இப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT