Published : 18 Mar 2019 10:47 AM
Last Updated : 18 Mar 2019 10:47 AM

கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு: ஆன்லைனிலிருந்து துப்பாக்கியை வாங்கிய குற்றவாளி

நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரெண்டன் டாரன்ட் ஆன்லைனிலிருந்து துப்பாக்கி வாங்கியிருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 50  பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள். ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப்பட்ட  முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட், கிறிஸ்ட் சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் டாரன்ட்  ஆன்லைனில் ஆயுதங்கள் வாங்கியதாக நியூஸிலாந்தைச் சேர்ந்த துப்பாக்கி நிறுவனமான கன் சிட்டி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை)   கன் சிட்டி கூறும்போது, ''கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு நடத்திய டாரண்ட்  ஆன்லைனிலிருந்துதான் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வாங்கியுள்ளார். ஆனால் அவர்  கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆன்லைனில் விற்கப்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூஸிலாந்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் துப்பாக்கிக்கு உரிமம் வைத்துள்ளனர். இதில் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதற்கான ஆரம்ப வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x