Last Updated : 16 Mar, 2019 01:43 PM

 

Published : 16 Mar 2019 01:43 PM
Last Updated : 16 Mar 2019 01:43 PM

நியூஸிலாந்து மீதான எங்கள் நம்பிக்கையை அசைக்க முடியாது: மசூதி இமாம்

தொழுகையில் ஈடுபட்ட ஏராளமான முஸ்லிம்களை கொல்வதன்மூலம் நாட்டின்மீதான எங்கள் நேசத்தை சிதைத்துவிடவோ நம்பிக்கையை அசைத்துவிடவோ முடியாது என்று படுகொலை சம்பவம் நடந்த மசூதி இமாம் (மதகுரு) தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 49 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து படுகொலை நடைபெற்ற கிறிஸ்ட் சர்ச் நகரின் லின்வுட் மசூதியைச் சேர்ந்த இமாம் இப்ராஹிம் அப்துல் ஹலீம் இன்று (சனிக்கிழமை) தெரிவித்ததாவது:

''இப்போதும் நாங்கள் இந்த நாட்டை நேசிக்கிறோம். எங்கள் நம்பிக்கையை அசைக்க முடியாது. மசூதியில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அமைதியான தொழுகைக்கு மாறாக திடீரென அலறல் சத்தம் கேட்டது.  ரத்தக்களறியில் சிலர் இறந்தனர். அப்போது எல்லோரும் தரையில் படுத்துவிட்டனர். சில பெண்கள் அழத் தொடங்கினர். சிலர் உடனடியாக இறந்துவிட்டனர்.

''எங்கள் குழந்தைகள் இங்குதான் வாழ்கின்றனர். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்'' என்றுதான் தெற்கு பசிபிக் நாடான நியூஸிலாந்தில் முஸ்லிம்கள் நினைக்கின்றனர்.

பெரும்பாலான நியூஸிலாந்து மக்கள் எங்களுக்கு அனைத்துவிதமான ஆதரவையும் தர ஆர்வமாக உள்ளனர். முஸ்லிம் அல்லாத அந்நியர்கள் பலரும் எங்களைச் சந்தித்து கட்டியணைத்து ஆறுதல் அளித்து வருகின்றனர். இது மிகவும் முக்கியமானது. இது எங்களுக்கு பலத்தைத் தரும்.

தொழுகையில் ஈடுபட்ட ஏராளமான முஸ்லிம்களைக் கொல்வதன்மூலம் நியூஸிலாந்து நாட்டின் மீதான எங்கள் நேசத்தைச் சிதைத்துவிடவோ சக மக்களோடு நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அசைத்து விடவோ முடியாது''.

இவ்வாறு இமாம் இப்ராஹிம் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

வலதுசாரி தீவிரவாதிகள் மசூதிகளில் நடத்திய இத்தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டுஅந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x