Published : 27 Feb 2019 01:25 PM
Last Updated : 27 Feb 2019 01:25 PM

இந்தியாவுடன் மோதல் எதிரொலி: அணு ஆயுத தயாரிப்பு குழுவினருடன் இம்ரான் கான் திடீர் ஆலோசனை

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தகர்த்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் அணு ஆயுத நிபுணர்களுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  நேற்று  தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது.  இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. இதனை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.  இதனால் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருநாடுகளும் தங்கள் தரப்பில் ஆலோசனைகள் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, உருவாக்கம், ஆராய்ச்சி, மேம்பாடு தொடர்பான விஷயங்களை கவனித்து வரும் நிபுணர்களுடன் இன்று ஆலேசனை நடத்தினார். அணு ஆயுத தயாரிப்பு பிரிவின் மிக முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிகிறது. கூட்டம் பற்றி விவரங்கள் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x