Published : 25 Feb 2019 05:41 PM
Last Updated : 25 Feb 2019 05:41 PM

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தவில்லை எனில் மகிழ்ச்சியாக இருப்பேன்: ட்ரம்ப்

ஒருவேளை வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தவில்லை என்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம்மை இரண்டாவது முறையாக சந்திப்பது குறித்து பேசும்போது ட்ரம்ப் இதனை தெரிவித்தார்.

இதுகுறித்து வாஷிங்டனில் ட்ரம்ப் கூறும்போது, “ வடகொரியா- அமெரிக்கா இடையேயான உறவு நல்ல நிலையில் உள்ளது.   நான் துரிதப்படுத்தவில்லை.

நான் யாரையும் துரிதப்படுத்தவில்லை.  நான் ஏவுகணை சோதனை வேண்டாம் என்றேன். இதுவரை வடகொரியா எந்த ஏவுகணை சோதனையும் நடத்தவில்லை என்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்றார்.

அமெரிக்கா - வடகொரியா மோதலும் இணக்கமும்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில் வியட்நாமில்  ட்ரம்ப் - கிம் இடையே இரண்டாவது சந்திப்பு நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x