Last Updated : 25 Feb, 2019 10:54 AM

 

Published : 25 Feb 2019 10:54 AM
Last Updated : 25 Feb 2019 10:54 AM

அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் மோடியிடம் இம்ரான் கான் வேண்டுகோள்

அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தாக்கிப் பேசியதற்குப் பின்பு இந்த அறிக்கையை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்றபோது என்னிடம் பேசிய இம்ரான் கான், வறுமையையும், கல்வியறிவின்மையையும் பிராந்தியத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்றார். பதான் மண்ணின் மகன்கள் மரியாதையும், சத்தியத்தையும் காப்பாற்றுபவர்கள்.

தீவிரவாதத்துக்கு எதிராக உலகம் திரண்டிருக்கிறது. தீவிரவாத செயல்களைச் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறோம். தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும். பொறுமை காக்க மாட்டோம். தீவிரவாதத்தை எப்படி அழிக்க வேண்டும் என்பது தெரியும்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் இம்ரான் கானின் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''பிரதமர் இம்ரான் கான் அளித்த வாக்குறுதியின்படி நடப்பார். புல்வாமா தாக்குதலில் உரிய, நம்பத்தகுந்த ஆதாரங்களை அளித்தால் உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி அமைதிக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 19-ம் தேதியும் இதேபோன்ற அறிக்கையை பாகிஸ்தான் அரசு வெளியிட்டு இருந்தது. அதில், புல்வாமா தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம். உரிய ஆதாரங்களை அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்  எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை  அமைச்சகம் வெளியிட்ட பதில் அறிக்கையில், "புல்வாமா தாக்குதலை பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பும், அதன் தலைவர் மசூத் அசாரும் செய்துள்ளார்கள் என்பது தெரியும். இதுவே நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான ஆதாரம். ஆனால், ஆதாரங்கள் கேட்பது பாகிஸ்தான் நடவடிக்கை விருப்பமில்லாமல் இருப்பதைக் காட்டுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x