Published : 21 Feb 2019 10:15 AM
Last Updated : 21 Feb 2019 10:15 AM
2 நாட்கள் பயணமாக தென் கொரியா சென்ற பிரதமர் மோடிக்கு தென் கொரிய அரசு சிவப்பு கம்பள வரவேற்கு அளித்தது. அங்குள்ள இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தென் கொரியாவுடன் வர்த்தகம், முதலீடு, நட்புறவு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று இரவு தென் கொரியா புறப்படும் முன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், " தென் கொரியா இந்தியாவுக்கு மிகமுக்கியமான நட்புநாடு. குறிப்பாக மேக் இன் இந்தியா, உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுக்க ஊக்கமாக இருந்தது. இரு ஜனநாயக நாடுகளும் தங்களின் மதிப்புகளும், பிராந்திய கண்ணோட்டத்தையும், அமைதியையும் பகிர்ந்து கொள்ளும்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் இருநாடுகளும் கூட்டுறவுடன் செயல்படுவது வரவேற்கத்தக்கது, அடிப்படை அறிவியல் முதல் முன்னணி ஆய்வுகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது வரவேற்கக்கூடியது.
நமது மக்கள் தென் கொரிய மக்களுடன் நல்ல நட்புறவோடும், வர்தத்க பரிமாற்றங்களோடும் இருக்கிறார்கள். ஒன்றாக இணைந்து பணியாற்றுவது, எதிர்காலத்தில் நமது உறவை முன்னோக்கு அழைத்துச் செல்லும். " எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டுக்குப்பின் பிரதமர் மோடி 2-வதுமுறையாக தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு அதிபர் மூன் ஜா இன்னை இன்று சந்தித்து பேச உள்ளார்.
பிரதமர் மோடியின் பயணம் குறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், " இந்தியாவின் சிறப்பு நாடான தென் கொரியாவுக்கு பிரதமர் மோடியின் பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பை வலுப்படுத்தும். இந்த பயணத்தில் பிரதமர் மோடி வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய உள்ளார். சியோல் அமைதிப் பரிசையும் ஏற்க உள்ளார் " எனத் தெரிவித்தார்.
தென் கொரிய தலைநகர் சியோல் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தென் கொரிய அரசு பிரதிநிதிகள் பூங்கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றனர். விமானநிலையத்தில் காத்திருந்த இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் கைகுலுக்கி பிரதமர் மோடி அவர்களின் வாழ்த்துக்களையும், வரவேற்பையும் ஏற்றுக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT