Published : 21 Jan 2019 02:00 PM
Last Updated : 21 Jan 2019 02:00 PM
இந்தியாவின் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்று நேபாள அரசு வங்கியான நேபால் ராஷ்டிரா வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேபாள் ராஷ்டிர வங்கி ஞாயிற்றுக்கிழமை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ''சுற்றுலாப் பயணிகள், வங்கிகள், வணிக ரீதியான நிறுவனங்கள் ரூ.100 மதிப்புக்கு அதிகமான இந்தியாவின் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளைப் பயன்படுத்த நேபாளத்தில் தடை செய்யப்படுகின்றன'' என்று தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியை காத்மாண்ட் போஸ்ட் செய்தி நிறுவனமும் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக நேபாளத்துக்குச் சுற்றுலா வரும் இந்தியப் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தபோது, நேபாளத்தில் கோடிக்கணக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தேங்கிவிட்டன. அந்த நோட்டுகளை இதுவரை மத்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதால் நேபாள அரசு பெரும் நெருக்கடிக்கு உள்ளானது.
இதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் ரூ.2000, ரூ.500, ரூ.200 போன்ற இந்திய நோட்டுகள் நேபாளத்தில் தடை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது.இதற்கு வர்த்தகர்கள், சுற்றுலா நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதனை நேபாள அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT