Published : 21 Jan 2019 11:34 AM
Last Updated : 21 Jan 2019 11:34 AM

உலகிலேயே வயதான மனிதர் ஜப்பானில் காலமானார்

உலகின் வயதான மனிதர் மசாசோ நொனாகா, தன்னுடைய 113-வது வயதில் ஜப்பானில் காலமானார். இவர் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்த இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர்.

1905-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த மசாசோ நொனாகா, 113-வது வயதில் நேற்று (ஜன. 20-ம் தேதி) வயது மூப்பு காரணமாக தனது இல்லத்தில் காலமானார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன்னுடைய 'தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி'யை வெளியிடுவதற்கு சில மாதங்கள் முன்னால் பிறந்தவர் நொனாகா. இதற்கு முன்னதாக ஸ்பெயினைச் சேர்ந்த ஃப்ரான்சிச்கோ ஒலிவெரா கடந்த ஆண்டு இறந்த பிறகு, உலகின் மூத்த மனிதராக நொனாகாவை கின்னஸ் அறிவித்தது.

நொனாகாவின் இறப்பு குறித்து அவரின் பேத்தி யுகு கூறும்போது, ''அவரின் மரணத்தால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் உள்ளோம். நேற்று (ஜன.19) வழக்கம்போலத்தான் அவர் இருந்தார். காலையில் எழும்போது இறந்துவிட்டார். குடும்பத்தில் அவர் யாருக்கும் எந்தத் தொந்தரவும் அளிக்கவில்லை'' என்றார்.

இதுகுறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ''1931-ல் திருமணம் செய்து கொண்ட நொனாகாவுக்கு, 5 மகன்கள் பிறந்தனர். விடுதியொன்றை நடத்தி வந்த அவர், ஓய்வுக்காலத்தில் தொலைக்காட்சியில் குத்துச்சண்டையை விரும்பிப் பார்த்து வந்தார். இனிப்புகளை விரும்பிச் சாப்பிடுவார்.

உலகிலேயே நீண்ட காலம் வாழும் நபர்கள் ஜப்பானில் அதிகமாக உள்ளனர். அவர்கள் கின்னஸால் அங்கீகரிக்கப்படுகின்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஜூன் 2013-ல் ஜப்பானைச் சேர்ந்த உலகின் வயதான மனிதர் ஜிரோமன் குமுரா தன்னுடைய 116-வது வயதில் காலமானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x