Published : 07 Jan 2019 04:15 PM
Last Updated : 07 Jan 2019 04:15 PM

கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி; போலீஸ் விசாரணை

அமெரிக்காவில் சுமார் 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்குக் குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மிரர் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவில் அரிசோணா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கியதால் கோமா நிலைக்குப் போனார். சுமார் 14 ஆண்டுகளாக அவர் கோமாவிலேயே இருந்து வருகிறார்.

அவருக்கு பீனிக்ஸ் பகுதியில் உள்ள ஹேசியண்டா ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்குக் கடந்த டிசம்பர் 29-ம் தேதி குழந்தை பிறந்தது. அங்கிருந்த செவிலியர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ அப்பெண் கருவுற்றிருந்த விவரம் தெரியவில்லை.

வழக்கமான பரிசோதனைக்காக அவர்கள் சென்றபோது, பிரசவ வலியால் பெண் முனகியது அதிர்ச்சியை அளித்தது. பெண்ணுக்கு என்ன ஆனது என்று குழம்பிப் போயினர். சிறிது நேரத்திலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையின் தந்தை யார் என்று தெரியவில்லை. கோமாவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பெண்ணின் அறைக்குள் மற்றவர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து கூற சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x