Published : 01 Jan 2019 02:06 PM
Last Updated : 01 Jan 2019 02:06 PM

ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற சீன இளைஞர்: இன்னொரு கிட்னியும் பாதித்ததால் 7 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை

ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற சீன இளைஞரின் இன்னொரு கிட்னியும் பாதித்ததால்  7 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுமார் 7 வருடங்களுக்கு முன்னால் சியோ வாங் என்னும் 17 வயது டீனேஜ் இளைஞர் ஐபோன் வாங்க ஆசைப்பட்டார். அப்போதுதான் ஐபோன் 4 அறிமுகமாகி இருந்தது. பள்ளியில் அனைத்து நண்பர்களும் ஐபோன் 4-ஐ வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ஐபோன் இல்லாததால் வாங், மற்றவர்களால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டார்.

வாங் வீட்டின் பொருளாதார சூழ்நிலை, ஐபோன் வாங்க இடம் கொடுக்கவில்லை. நண்பர்கள் சிலர் கிட்னியை விற்றுப் பணம் பெறலாம் என்று யோசனை கூறினர். சட்டவிரோதமாக உறுப்பு விற்கும் மருத்துவமனை ஒன்றில் விசாரித்தார் வாங். ஆரோக்கியமாக உயிர் வாழ ஒரு கிட்னியே போதும் என்று போலி மருத்துவர்கள் சிலர் உறுதியளித்தனர். கிட்னியைப் பெற்றுக்கொண்டு சுமார் ரூ. 2 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாக்கு கொடுத்தனர்.

அந்தப் பணம் ஐபோன் வாங்குவதற்குத் தேவைப்படும் தொகையைவிட அதிகமாகவே இருந்தது. உடனே கிட்னியை விற்க முடிவெடுத்தார் வாங். அறுவை சிகிச்சை முடிந்த ஒரு வாரத்தில் பழைய நிலைக்கு வந்துவிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, வாங்கின் உடல்நிலை மோசமானது. அறுவை சிகிச்சை சுகாதாரமான முறையில் செய்யப்படாததால் தொற்று ஏற்பட்டது.

இதை வாங் கவனிக்காததால், தொற்று பெரிதாகியது. இதை அவரின் பெற்றோர் அறிந்து முறையான சிகிச்சை அளிப்பதற்குள், மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 7 ஆண்டுகளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறார் வாங். அவரின் பெற்றோர் டயாலிசிஸ் மற்றும் பிற செலவுகளுக்காகத் திண்டாடி வருகின்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x