Published : 01 Nov 2018 12:17 PM
Last Updated : 01 Nov 2018 12:17 PM

இலங்கை நாடாளுமன்றம் 5-ம் தேதி கூடுகிறது: முடக்கும் உத்தரவை திரும்பப் பெற்றார் சிறிசேனா

இலங்கையில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கும் உத்தரவை அதிபர் சிறிசேனா திரும்பப் பெற்றுள்ளார். மேலும் வரும் திங்களன்று நாடாளுமன்றத்தை கூட்டவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை மக்கள் சுதந்திரா கட்சியும், பிரதமர் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணியாக அமைத்து ஆட்சியில் இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ராஜபக்சே கட்சியான, இலங்கை மக்கள் முன்னணி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அது தோல்வி அடைந்தது.

சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தது.

இந்த சூழலில் ஆளும் விக்ரமசிங்கே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி அறிவித்தது. புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றார். ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் நானே பிரதமர் என ரணில் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ராஜகபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 இடங்கள் உள்ளன. இன்னும் பெரும்பான்மைக்கு 7 இடங்கள் மட்டுமே தேவை. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ரணில் பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்புள்ளது.

இதனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி இருந்தார். நாடாளுமன்றத்தை கூட்டினால் ரணில் வெற்றி பெற்று, ராஜ பக்சே தோல்வியடையக்கூடும் என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்கி, அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.

ஆனால், நாட்டின் சட்டப்பூர்வ பிரதமர் ரணில் விக்ரசிங்கே தான் என்று சபாநாயகர் ஜெயசூர்யா அங்கீகரித்துள்ளார். ரணிலுக்கு ஆதரவாக இலங்கையில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் இலங்கையில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டப்படி நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என ஐநா மற்றும் உலக நாடுகள் சிறிசேனாவை அறிவுறுத்தி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்றத்தை முடக்கும் உத்தரவை அதிபர் சிறிசேனா இன்று திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும், வரும் திங்களன்று நாடாளுமன்றத்தை கூட்டவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x