Published : 17 Oct 2018 10:35 AM
Last Updated : 17 Oct 2018 10:35 AM
இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையின் வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அதிபர் சிறிசேனா கலந்து கொண்டு பேசியதாவது:
‘‘இந்தியா - இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான ரா எனப்படும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவு என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை’’ எனக் கூறினார்.
அதிபர் சிறிசேனாவின் இந்தக் குற்றச்சாட்டை கேட்டு அமைச்சர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இலங்கை அதிபரின் இத்தகைய குற்றச்சாட்டு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், எனினும் இந்தப் புகாரை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, இதுகுறித்து விரிவாக விசாரணை செய்த பிறகே பதில் தெரிவிக்க முடியும் என இலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தியா வரவுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டை அதிபர் சிறிசேனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT