Published : 06 Oct 2018 02:42 PM
Last Updated : 06 Oct 2018 02:42 PM
இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில் அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க ‘இண்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் உள்ளது. இதன் தலைவராக மெங் ஹாங்வே பதவி வகித்து வருகிறார்.
லயோன் நகரில் வசித்து வந்த அவர் செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை. இதுதொடர்பாக அவரது மனைவி புகார் அளித்தார். இதனை இண்டர்போல் விசாரணை செய்து வருகிறது. இந்தநிலையில் அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெங்க் ஹாங்வே கடந்த மாதம் சீனா சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரை சீன போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். எதற்காக அவரிடம் விசாரணை நடைபெறுகிறது, எந்த இடத்தில் விசாரணை நடைபெறுகிறது என்ற எந்த விவரத்தையும் சீன அரசு வெளியிடவில்லை.
மெங் ஹாங்வே சீனாவைச் சேர்ந்தவர். அந்நாட்டின் துணை அமைச்சராக ஏற்கெனவே பதவி வகித்தவர். இந்த நிலையில் தான் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு பிரச்சினைக்காக அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என இண்டர்போல் விசாரணை நடத்தி வருகிறது.
இண்டர்போல் தலைவரை தடுப்பக்காவலில் வைத்த விவரத்தை சீனா வெளியே செல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இண்டர்போல் அதிகாரிகள் சீன அரசை தொடர்பு கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT