Published : 26 Sep 2018 10:29 AM
Last Updated : 26 Sep 2018 10:29 AM

‘‘அப்போது நான் பதவியில் இல்லை’’ - ரபேல் ஒப்பந்த சர்ச்சை குறித்து பிரான்ஸ் அதிபர் மழுப்பல் பதில்

ரபேல் விமான சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன், அப்போது தான் பதவியில் இல்லை என மழுப்பலான பதில் அளித்தார்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதே இதுதொடர்பாக பிரான்ஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஒரு போர் விமானத்தின் விலை ரூ.526 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய அரசு ஒரு போர் விமானத்தை ரூ.1,670 கோடி விலையில் வாங்குவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது ரகசிய ஒப்பந்தம் என்பதால் விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு கூறி வருகிறது.

இதனிடையே, பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறுகையில் ‘‘பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸூக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது’’ என தெரிவித்தார்.

அம்பானி நிறுவனத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டார் என காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஹாலண்டேயின் பேட்டி மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய அரசியலில், புயலை கிளப்பி வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டின் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவரிடம் நிகழ்ச்சிக்கு இடையே இந்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கமல் அவர் நழுவினார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது தான் பிரதமர் பதவியில் இல்லை என மழுப்பலாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ‘‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸிடம் தெளிவான விதிமுறைகள் உள்ளன. இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம். இருநாடுகளுக்கும் ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களி்ல் விரிவான ஒத்துழைப்பு உள்ளது’’ என தெரிவித்தார்.

ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானபோது பிரான்ஸ் அதிபராக ஹாலண்டே பதவி வகித்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் மக்ரோன் வெற்றி பெற்று அதிபரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x