Published : 11 Sep 2018 01:09 PM
Last Updated : 11 Sep 2018 01:09 PM

ட்ரம்ப்பை மீண்டும் சந்திக்க கிம் விருப்பம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்து வடகொரிய அதிபர் கிம் வெள்ளை மாளிக்கைக்குக் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

 

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணைச் சோதனைகளை கடந்த ஆண்டு நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், இந்த எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது. இதனைத் தொடர்ந்து தென்கொரியாவில் நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் வடகொரியா - தென்கொரியா இடையே நட்புறவு உண்டானது. இதனைத் தொடர்ந்து வரலற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரில் சந்தினர்.

இதில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்திக்க கிம் மீண்டும் விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்தக் கடிதம் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில், "வடகொரியாவின் இந்தக் கடிதம் அவர்கள் ஆணு ஆயுதக் கூடங்களை அழிப்பதில் முனைப்பாக இருக்கும் ஆர்வத்தைக் காட்டுகிறது. ட்ரம்ப்பை மீண்டும் சந்திக்க கிம் விரும்புகிறார் என்பதே அந்தக் கடிதத்தின் அடிப்படையாகச் சொல்லப்பட்டிருந்தது. இதற்கான முயற்சிகள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.

இரண்டாவது சந்திப்பு எங்கு, எப்போது நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x