Published : 11 Sep 2018 11:06 AM
Last Updated : 11 Sep 2018 11:06 AM

லிபியா எண்ணெய் நிறுவனத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 2 பேர் பலி; பலர் காயம்

லிபியாவில் எண்ணெய் நிறுவனத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

 

இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், "லிபியாவில் தலைநகர் திரிபோலியில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் எண்ணெய் நிறுவனத்தின் 2 காவலர்கள் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் இருவரும் பலியாகினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் குறித்து லிபிய உள்துறை அமைச்சர் கூறும்போது, "எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது" என்று கூறியுள்ளார்.

எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபியக் கிளர்ச்சியின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இதில், 34 ஆண்டுகள் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபி கொல்லப்பட்டார்.

அதன்பின், ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. ஆனால், அதன்பின் லிபியாவில் குழப்பம் ஏற்பட்டது. ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் லிபியாவில் போட்டி நாடாளுமன்றங்களை ஏற்படுத்தி இரு பிரிவாக அரசாட்சி செய்து வருகின்றனர்.

கடாபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் ஐஎஸ் அமைப்பு அங்கு வலுவாக காலூன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x