Published : 24 Aug 2018 10:06 AM
Last Updated : 24 Aug 2018 10:06 AM

என்னை பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சரியும்: ட்ரம்ப் எச்சரிக்கை

என்னை பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சரியும் என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். அப்போது டொனால்டு ட்ரம்ப் மீது நடிகைகள் ஸ்ட்ரோமி டேனியல்ஸ், கெரன் மெக்டக்கால் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்தனர்.

இரு நடிகைகளும் ட்ரம்புக்கு எதிராக பொதுஅரங்கில் பேசாமல் இருப்பதற்கு ட்ரம்பின் அப்போதைய வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் பெரும் தொகையை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது தன் மீதான குற்றச்சாட்டை கோஹன் ஒப்புக் கொண்டார். அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், “வேட்பாளரின் (ட்ரம்ப்) அறிவுறுத்தலின்படி நடிகைகளுக்கு பணம் கொடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு என்பதால் மைக்கேல் கோஹனுக்கு 65 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர் கோஹனின் வாக்குமூலம் அதிபர் ட்ரம்புக்கு அரசியல்ரீதியாக பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுந்து வருகின்றது.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ட்ரம்ப் கூறியதாவது:

”ஒருவர் சிறப்பான முறையில் பணி செய்து கொண்டிருக்கும்போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. என்னை பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்காவில் பெரிய அளவு பொருளாதாரம் சீர்குலையும். அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x