Published : 20 Aug 2018 03:21 PM
Last Updated : 20 Aug 2018 03:21 PM

பொருளாதாரத் தடைக்கு அமெரிக்கா அடிமையாகிவிட்டது: ஈரான்

பொருளாதாரத் தடைக்கு அமெரிக்கா அடிமையாகிவிட்டதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த நேர்காணலில் இதனை அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, "ஈரான் மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடைகளால் ஈரான் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என அந்நாடு இன்னும் பாடம் கற்பிக்கவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டியதில்லை. இந்த அணுசக்தி ஒப்பந்தத்தையே அமெரிக்க அமல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அமெரிக்கா பொருளாதாரத் தடைகளுக்கு அடிமையாகிவிட்டது.

அமெரிக்காவின் பொருளாதராத் தடைகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மக்கள் உணவு, மருந்து வாங்க சிரமப்படுகிறார்கள்.  அமெரிக்காவுடனான நட்பு நாடுகளே அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றனர்'' என்றார்.

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப்  கடந்த வாரம் கையெழுத்திட்டார். மேலும் ட்விட்டரில், ''இது நவம்பர் மாதம் அடுத்தகட்ட நிலையை அடையும். யாராவது ஈரானுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம்.  நான் உலகத்தின் அமைதிக்காகவே இதைக் கேட்கிறேன். வேறு எதுவும் இல்லை'' என்று பதிவிட்டிருந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x