Published : 18 Aug 2018 12:51 PM
Last Updated : 18 Aug 2018 12:51 PM
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெற்றி பெற்றதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார்.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றது.
இதையடுத்து 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 172 உறுப்பினர்கள் தேவை. இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்ற இடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைச் சேர்க்கும் போது அந்தக் கட்சிக்கு 176 பேரின் ஆதரவு கிடைத்து ஆட்சி அமைக்கும் தகுதி பெற்றது.
இந்நிலையில் பிரதமர் பதவிக்கு நவாஸ் ஷெரீப் கட்சியின் சார்பில் ஷான்பாஸ் ஷெரீப் போட்டியிட்டு, மனு செய்தார். அந்தக் கட்சிக்கு 96 இடங்கள் மட்டுமே இருப்பதால், நிச்சயம் தோற்பார் என்பது அறிந்த விஷயம் என்றாலும்கூட வேண்டுமென்றே மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 176 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கான் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹுசை ன் முன்னிலையில் ஜனாதிபதி மாளிக்கையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சிந்து, ரமிஸ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT