Published : 20 Jul 2018 02:38 PM
Last Updated : 20 Jul 2018 02:38 PM

அமெரிக்காவுக்கு வருகை தர புதினுக்கு ட்ரம்ப் அழைப்பு

அமெரிக்காவுக்கு வருகை தர ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பு விடுக்க ட்ரம்ப் முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா சாண்ட்ரஸ் கூறும்போது, "அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனிடம் புதினை அமெரிக்காவுக்கு அழைப்பு விடுக்க ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து இது குறித்த ஆலோசனைகள் நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்கட்கிழமை சந்தித்து பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து இந்த அழைப்பை ட்ரம்ப் விடுத்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலின்போது ட்ரம்ப் வெற்றிபெற ரஷ்ய உளவுத் துறை சமூக வலைதளங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த திங்கள்கிழமை பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அதிபர் ட்ரம்ப் சந்தித்தார். பின்னர்  இருவரும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்று இருவரிடமும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தக் குற்றச்சாட்டை அதிபர் புதின் திட்டவட்டமாக மறுத்தார். அதிபர் ட்ரம்ப் கூறியபோது, அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்கான காரணம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் புதினுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப்பின் நடவடிக்கை அமெரிக்காவைக் கீழறிக்கிவிட்டது என ஜனநாயக கட்சியினர்  குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் புதினுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கு புதினின் வருகை அடுத்த ஆண்டு இருக்கும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x