Published : 10 Jul 2018 10:44 AM
Last Updated : 10 Jul 2018 10:44 AM

ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நாடு திரும்பினால் கைது செய்வோம்: பாகிஸ்தான் சட்டத் துறை அமைச்சர் உறுதி

லாகூர்

‘‘முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் நாடு திரும்பினால், அவர்களை கைது செய்வோம்’’ என்று பாகிஸ்தான் சட்டம் மற்றும் தகவல் துறை அமைச்சர் அலி ஜாபர் திட்டவட்டமாகக் கூறினார்.

வெளிநாடுகளில் அளவுக்கு அதிகமாக பணம், சொத்து குவித்து வைத்துள்ள உலக பிரபலங்களின் பெயர்களை பனாமா பேப்பர்ஸ் வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து நவாஸ் ஷெரீப், பிரதமர் பதவி இழந்தார்.

இந்நிலையில், லண்டனில் பிளாட்டுகள் வாங்கியது, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தேசிய பொறுப்புடமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், வழக்குக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் ஓராண்டு சிறை தண்டனையும் அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், வழக்குக்கு ஒத்துழைக்காத குற்றத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. எனினும், சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

மேலும், நவாஸ் ஷெரீப்பின் மருமகனும், மரியமின் கணவருமான முகமது சப்தார், வழக்கு விசாரணையில் ஒத்துழைப்பு அளிக்காததற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளர்கள் ராவல் பிண்டியில் போராட்டம் நடத்தினர். பின்னர் பேரணி சென்றனர். அப்போது முகமது சப்தாரைப் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் சட்டம் மற்றும் தகவல் துறை அமைச்சர் அலி ஜாபர் கூறியதாவது:

லண்டனில் உள்ள நவாஸ், அவரது மகள் மரியம் இருவரும் பாகிஸ்தானின் எந்த விமான நிலையத்தில் வந்திறங்கினாலும், அவர்களைக் கைது செய்வோம். பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவோம். இவ்வாறு அமைச்சர் அலி ஜாபர் கூறினார். நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது லண்டனில் தங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x