Published : 06 Jul 2018 08:59 AM
Last Updated : 06 Jul 2018 08:59 AM

பாகிஸ்தான் தேர்தலில் அப்பாஸி போட்டியிட அனுமதி: லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்று லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரீப் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக பிரதமர் பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராக பதவியேற்றார். தற்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தற்காலிக பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட அப்பாஸி மனு தாக்கல் செய்தார். ஆனால், சொத்து விவரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்த பஞ்சாப் தேர்தல் நடுவர் மன்றம், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட அப்பாஸிக்கு தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு நீதிபதி மஜாஹிர் அலி அக்பர் நக்வி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதி, அப்பாஸி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x