Published : 30 Jun 2018 09:32 AM
Last Updated : 30 Jun 2018 09:32 AM
அமெரிக்க பத்திரிகை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் செய்தியாளர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், அன்னாபோலிஸ் நகரில் ‘கேபிடல் கெஜட்’ பத்திரிகை அலுவலகம் செயல்படுகிறது. அந்த அலுவலகத்துக்குள் நேற்று நுழைந்த இளைஞர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 5 ஊழியர்கள் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
துணை ஆசிரியர் ராப் (59), செய்தியாளர்கள் வெண்டி வின்டர்ஸ் (65), ஜெரால்டு பிஷ்மேன் (61), ஜான் (56) மற்றும் விற்பனை பிரிவு ஊழியர் ரெபேக்கா (34) ஆகியோர் பலியாகி இருப்பதாக பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலையாளியை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஜெராட் வாரன் ரமோஸ் (38) என்பது தெரியவந்தது.
ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கடந்த 2011 ஜூலையில் ஜெராட் வாரன் ரமோஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விரிவான செய்தி ‘கேபிடல் கெஜட்டில்’ வெளியானது. இந்த விவகாரத்தில் பத்திரிகை நிறுவனத்துக்கு எதிராக ரமோஸ் வழக்கு தொடர்ந்தார். இதில் பத்திரிகை நிறுவனத்துக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த முன்பகை காரணமாக ‘கேபிடல் கெஜட்டின்’ செய்தியாளர் அறைக்குள் அத்துமீறி புகுந்து ஜெராட் வாரன் ரமோஸ் தாக்குதல் நடத்தியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT