Published : 29 Jun 2018 08:41 AM
Last Updated : 29 Jun 2018 08:41 AM
தீவிரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுக்கத் தவறியதால், பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் வைக்க சர்வ தேச நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.
சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கைக்கான செயல்பாட்டுக் குழு (எப்ஏடிஎப்) 1989-ல் நிறுவப்பட்டது. சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு இடையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, தீவிரவாதத்துக்கு உதவும் வகையில் நிதியுதவி உட்பட சர்வதேச நிதி நடைமுறையின் ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை முறியடிப்பதே இதன் நோக்கம். இந்த அமைப்பின் வருடாந்திர கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 37 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பாகிஸ்தான் சார்பில் நிதியமைச்சர் ஷம்ஷத் அக்தர் பங்கேற்றார். முதலில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத்-தவா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
ஆனாலும், தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியைத் தடுக்க போதுமான அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பாகிஸ்தானை சர்வதேச ஒத்துழைப்பு மறு ஆய்வுக் குழு (ஐசிஆர்ஜி) கண்காணிக்கும் (கறுப்பு பட்டியல்) நாடுகள் பட்டியலில் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT