Published : 10 Jun 2018 09:08 AM
Last Updated : 10 Jun 2018 09:08 AM

உலக மசாலா: போராட்டப் பாடல்

ங்கிலாந்தைச் சேர்ந்த 6 வயது அன்யா ஓட்லே, அரிய வகை சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அன்யா பாடிய ‘போராட்டப் பாடல்’ வீடியோ, உலகம் முழுவதும் வைரலாகியிருக்கிறது. 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு விழாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது அன்யா மிகவும் சோர்வாக இருந்தாள். வயிறு கொஞ்சம் பெரிதாகத் தெரிந்ததால் உடனே மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சிறுநீரகத்தில் எலுமிச்சை அளவு புற்றுக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. கீமோ தெரபி ஆரம்பிக்கப்பட்டது.

“ஒவ்வொரு கீமோ தெரபியின்போதும் மிகவும் சோர்ந்து போனாள். ஒருகட்டத்தில் தனக்கு ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்துகொண்டாள். நான் விரைவில் மரணம் அடைந்துவிடுவேனா என்ற அவளது கேள்வி என்னை நிலைகுலைய வைத்தது. உனக்கு வந்திருப்பது புற்றுநோய்தான். ஆனால் தைரியமாக இருந்தால் அதை விரட்டி விடலாம் என்று சொன்னவுடன், அவளின் முகம் மலர்ந்தது. அன்று முதல் கீமோ தெரபி எடுக்கும்போது பெரிய அளவில் அழுகையோ, புலம்பலோ அவளிடம் இல்லாமல் போனது. மற்ற குழந்தைகள் எல்லாம் அழுதுகொண்டிருப்பார்கள். இவள் தைரியமாக மருத்துவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பாள்.

வலியிலிருந்து அவள் கவனத்தைத் திருப்ப, அவளுக்குப் பிடித்த லிட்டில் மிக்ஸ் ஆல்பங்களை வாங்கிக் கொடுத்தேன். அதைத் கேட்டு, கேட்டு தன்னுடைய துன்பங்களை மறந்தாள். 28 தடவை எடுத்த கீமோ தெரபியின் விளைவாக புற்றுக் கட்டி காணாமல் போய்விட்டது. ஜூலை வரை கீமோ எடுக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் புற்றுநோய் வந்துவிடாமல் இருப்பதற்காக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அன்யாவின் முடியை வெட்டி அவளுக்கு ஒரு விக் தயார் செய்து கொடுத்தோம். ஆனால் அதை அவள் அணிய விரும்பவில்லை. எனக்குப் புற்றுநோய் இருப்பது எல்லோருக்கும் தெரியட்டும், என்னைப் பார்த்து எல்லோரும் தைரியமாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாள். எங்கள் வீட்டுத் திருமணத்தில் முதல் முறை மேடையேறிப் பாடினாள். பாட்டுக்கு இடையில், ‘இது போராட்டத்துக்கான பாடல். நான் நோயிலிருந்து மீண்டு வந்ததற்கான பாடல்’ என்று அவள் சொன்னவுடன் அத்தனை பேரும் கண்ணீர் விட்டனர். சிரித்துக்கொண்டே பாடலைப் பாடி முடித்தாள் அன்யா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள்” என்கிறார் அன்யாவின் அம்மா கேத்ரின்.

போராட்டக்காரி அன்யாவுக்கு ஒரு பூங்கொத்து!

சா

லைகளில் நடக்கும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று எவ்வளவு சொன்னாலும் பெரும்பாலானவர்கள் கேட்பதில்லை. விபத்துகளும் அதிகம் நடக்கின்றன. இதைத் தடுப்பதற்காகச் சீனாவின் ஸியான் நகரின் சாலைகளில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மொபைல் போனைப் பயன்படுத்துகிறவர்கள் இந்தப் பகுதியில் மட்டும் நடக்க வேண்டும். மொபைல் போனைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது எதிரில் உள்ளவர்கள் மீது மோதினாலும் பெரிய அளவுக்குப் பாதிப்பு வராது. மற்ற வாகனங்கள் இந்தப் பகுதியில் பயணிக்கக் கூடாது.

இவர்கள் வழி தனி வழி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x