Published : 02 Jun 2018 11:03 AM
Last Updated : 02 Jun 2018 11:03 AM
சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிஅந்த நாட்டு அதிபர் ஜோகோ விடோடாவை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளிடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் சிங்கப்பூர் செல்லும் வழியில் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதிர் முகமதுவை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு கலாச்சார, வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
மலேசியாவில் இருந்து நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு மோடி சென்றார். அங்கு நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கும் சந்தித்தனர். மாநாட்டில் இரு தலைவர்களும் உரையாற்றினர். அதைத்தொடர்ந்து, மகாத்மா காந்தியின் நினைவிடங்களுக்கு கோ சோக் டாங் உடன் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் சிங்கப்பூரில் தமிழர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வரும் மாரியம்மன் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அவரை கோயில் நிர்வாகிகளும், அதிகாரிகளும் வரவேற்றனர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமர் மோடிக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற சூலியா மசூதிக்கும் பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். அவருடன் சிங்கப்பூர் கலச்சார அமைச்சர் கிரேஸ் யென் உடன் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT