Last Updated : 01 Jun, 2018 09:32 PM

 

Published : 01 Jun 2018 09:32 PM
Last Updated : 01 Jun 2018 09:32 PM

பெண்களை கார் ஓட்ட, சினிமா பார்க்க விடாதீர்கள்: சவுதி அரேபிய இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை

பெண்களை கார் ஓட்ட அனுமதித்தல், திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க அனுமதித்தல் போன்ற பாவமான காரியங்களைச் செய்யாதீர்கள் என்று சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன.

ஆனால், சவுதி அரேபியின் இளவரசர் வந்த முகம்மது பின் சல்மான் ஆட்சிக்குப் பின் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இவர் சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்தார். அதுமட்டுமல்லாமல், பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் அவர் அனுமதித்தார்.

இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திச் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் வரவழைத்துள்ளது. முஸ்லிம் நாடுகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய நிலையில், பெண்களுக்கு அதிகமான சுதந்திரம் அளிப்பதை அல்கொய்தா தீவிரவாத அமைப்பு கண்டித்துள்ளது.

இது தொடர்பாக ஏமனில் உள்ள அல்கொய்தா அமைப்பு சவுதி இளவரசருக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது:

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

''சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆட்சியில் ஏராளமான மாற்றங்கள் வருகின்றன. மசூதிகள் அனைத்தும் சினிமா தியேட்டர்களாக மாறுகின்றன, பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள், இமாம்களுக்கு மாற்றுப் புத்தகங்கள் தரப்படுகின்றன. மேற்கத்திய மற்றும் கிழக்கு நாடுகளில் இருந்து ஆத்திகவாதிகளும், மதச்சார்பின்மையாளர்களும் வந்து கருத்துகளைப் பரப்புகிறார்கள். ஒழுக்கக் குறைவு ஏற்படவும், ஊழல் நடைபெறவும் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

புனித மெக்கா நகருக்கு அருகே அமைந்திருக்கும் கடற்கரை நகரான ஜெத்தாவில் டபில்யு டபில்யு இ எனப்படும் ராயல் ரம்பிள் மல்யுத்தப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியைப் பார்க்க வந்திருந்த முஸ்லிம் இளம் பெண்கள், ஆண்கள் மத்தியில் ஆண், பெண் போட்டியாளர்கள் தங்கள் உடலைக் காட்டிக்கொண்டும், மறைக்க வேண்டிய உடற்கபகுதிகளை மறைக்காமல் விளையாடினார்கள்.

இதைப் பார்வையாளர்களும் ரசித்தார்கள். இரவு நேரங்களில் இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. திரையரங்களும், சர்க்கஸ் காட்சிகளும் தொடர்ந்து நடக்கின்றன. இந்த ஊழல்வாதி அரசு அதிகாரிகள் எதையுமே தடுக்கவில்லை. இதுபோன்ற மதத்துக்கு விரோதமான பாவமான காரியங்களைச் செய்யாதீர்கள்.''

இவ்வாறு அல்கொய்தா கடுமையாக எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x