Published : 09 Apr 2018 11:02 AM
Last Updated : 09 Apr 2018 11:02 AM
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு கவுடா பகுதியில் ரசாயன வாயுவை செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுடா பகுதியை மீட்பதற்காக, அந்நாட்டு அதிபரின் ஆதரவுப் படையினர் இரண்டு மாதங்களாக வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அது உரிய முறையில் செயல்பாட்டிற்கு வரவில்லை. தொடர்ந்து அங்கு விதிமுறைகளை மீறி தாக்குதல் நடந்து வருகிறது. . இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிரியாவில் பணியாற்றும் அமெரிக்க மருத்துவ நிவாரண அமைப்பு கூறியுள்ளதாவது:
‘‘கிளர்ச்சியாளர்கள் பகுதியில் ரசாயன தாக்குதல் நடந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டு 49 பேர் உயிரிழந்துள்ளனர். வாயில் நுரை தள்ளி அவர்கள் இறந்துள்ளனர். நுரை தள்ளி உயிரிழந்தவர்களின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது. ஆயிரக்கணக்கானோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ எனக்கூறியுள்ளது.
சர்வதேச சமூகம் தலையிட்டு இந்த கோர தாக்குதலை நிறுத்த வேண்டும் என கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலை சிரியா அரசு மறுத்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT