Published : 09 Apr 2018 07:36 AM
Last Updated : 09 Apr 2018 07:36 AM
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபிஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத் தவா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த நாட்டை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கி வரும் நிதி உதவியை அமெரிக்கா குறைத்துக் கொண்டது.
இந்த சூழ்நிலையில்தான் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை (ஏடிஏ) திருத்துவதற்கான அவசர சட்டத்தை பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் பிறப்பித்திருந்தார்.
இந்த சட்டம் 120 நாட்களில் காலாவதி ஆக உள்ளது. எனவே, இந்த அவசர சட்டத்தை சட்டமாக்குவது தொடர்பான சட்ட மசோதாவை பாகிஸ்தான் அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதா இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
இந்த சட்டம் நிறைவேறினால் ஜமாத்-உத் தவா அமைப்பு உட்பட, அந்நாட்டு உள் துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பல தீவிரவாத அமைப்புகள் நிரந்தரமாக தடை செய்யப்படும். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT