Published : 13 Feb 2018 06:11 PM
Last Updated : 13 Feb 2018 06:11 PM

தென் கொரிய முன்னாள் பெண் அதிபரின் தோழிக்கு 20 ஆண்டுகள் சிறை: ஊழல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

தென்கொரியாவில் பார்க் குவென் ஹை அதிபராக இருந்தபோது பெரும் ஊழல் செய்து பல கோடி ரூபாய் சொத்து சேர்த்த புகாருக்கு ஆளான அவரது தோழி சோய் சூன் சூலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென் கொரியாவில் பெண் அதிபராக இருந்த பார்க் குவென் ஹை மற்றும் அவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில் ஆகியோர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. அதிபருடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனங்கள் பெயரில் நிதி திரட்டியதாகவும் அரசுப் பணி நியமனங்களில் தலையிட்டதாகவும் சோய் சூன் சில் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அரசின் முக்கிய முடிவுகளை எடுக்க தோழி, சோய் சூன் சில்லுக்கு பார்க் அனுமதி வழங்கியதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் அந்நாட்டில் பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் பார்க் மற்றும் சூன் சூல் ஆகியோருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து தென் கொரிய நாடாளுமன்றம், அதிபர் பார்க்கை பதவி நீக்கம் செய்தது. அதன் பின் நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சியைச் சேர்ந்த மூன் ஜே தென் கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, பார்க் குவென் ஹை மற்றும் சோய் சூன் சில் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த ஊழல் வழக்கை விசாரித்த நீதிமன்றம் சோய் சூன் சில்லுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. மேலும் 110 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தவிட்டது.  இதையடுத்து உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பார்க் மீதான வழக்கு தனியாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x