Published : 13 Feb 2018 10:17 AM
Last Updated : 13 Feb 2018 10:17 AM
தேரைக்கு இரையாகி அதன் வயிற்றில் சிக்கிக் கொள்ளும் வண்டுகள் ரசாயன திரவத்தைப் பீய்ச்சியடித்து தப்பிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜப்பானின் கோபே பல்கலைக்கழக வேளாண் விஞ்ஞானிகள் ஷின்ஜி சுகுரா, டாக்குயா சத்தோ ஆகியோர் ‘பம்பாடியர்’ வண்டு கள் குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் ஒரு பகுதியாக, கூண்டில் அடைக்கப்பட்ட தேரையிடம் ‘பம்பாடியர்’ வண்டு விடப்பட்டது. அந்த வண்டை தேரை தனது நாக்கால் லாவகமாக பிடித்து விழுங்கியது. தேரைக்கு இரையாகி அதன் இரைப்பைக்குள் சிக்கிய வண்டு, ரசாயன திரவத்தை பீய்ச்சியடித்தது. ரசாயன திரவத்தின் வீரியத்தை தாக்குப் பிடிக்க முடியாத தேரை அடுத்த 15 நிமிடங்களில் அந்த வண்டை வெளியே துப்பியது. எவ்வித பாதிப்பும் இல்லாமல் வண்டு உயிர்ப் பிழைத்து கொண்டது. இதுதொடர்பான ஆய்வு கட்டுரையையும் வீடியோவையும் பிரிட்டனைச் சேர்ந்த ‘பயாலஜி லெட்டர்ஸ்’ என்ற அறிவியல் இதழ் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் ஷின்ஜி சுகுரா, டாக்குயா சத்தோ கூறியபோது, “தேரையின் இரைப்பையில் உணவுகளை செரிமானம் செய்ய வைக்கும் அமிலங்கள் சுரக்கும். அந்த அமிலத்தில் ‘பம்பாடியர்’ வண்டுக்கு பாதிப்பும் ஏற்படவில்லை. இது இயற்கையின் அதிசயம். இதேபோல பல்வேறு தேரைகள் மற்றும் வண்டுகளைக் கொண்டு சோதனை நடத்தினோம். 43 சதவீத தேரைகள்வண்டுகளை வெளியே துப்பின. பெரிய வண்டுகள் அதிக அளவில் ரசாயன திரவத்தை பீய்ச்சியடிப்பதால் அவற்றை தேரைகள் வெளியே தள்ளின. அதேநேரம் சிறிய வண்டுகளைத் தேரைகள் தங்களுக்கு இரையாக்கிக் கொண்டன” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT