Published : 10 Dec 2017 09:28 AM
Last Updated : 10 Dec 2017 09:28 AM
கொரிய தீபகற்ப போர் பதற்றத்துக்கு அமெரிக்காவே காரணம் என்று வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவும் தென்கொரியாவும் தொடர்ச்சியாக போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. சபையின் மூத்த தூதர் ஜெப்ரீ பெல்ட்மேன் கடந்த 5-ம் தேதி திடீர் பயணமாக வடகொரியா சென்றார். அங்கு 4 நாட்கள் முகாமிட்டு அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் உட்பட பல்வேறு மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினார். அவர் நேற்று தனது பயணத்தை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து வடகொரியாவின் அரசு ஊடகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கொரிய தீபகற்பத்தில் நடத்தி வரும் போர் ஒத்திகைகளால் பதற்றம் அதிகரித்து வருகிறது. அணு ஆயுத போர் பதற்றத்துக்கு அமெரிக்காவே காரணம். ஐ.நா. தூதரின் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது. வடகொரியாவும், ஐ.நா. சபையும் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிவு செய்யப்பட்டுள் ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
சீனா அறிவுரை
இதனிடையே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பெய்ஜிங்கில் நேற்று கூறியபோது, வடகொரியா விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படவில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT