Published : 13 Oct 2017 05:32 PM
Last Updated : 13 Oct 2017 05:32 PM
பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியா கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 இடங்கள் பின் தங்கி, 100-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு மோசமான நிலையில் உள்ளது.
பட்டினியால் வாடும் நாடுகள் பற்றிய குறியீட்டுப் பட்டியலை சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் ஆய்வு முடிவுகள் பின்வருமாறு:
''உலகம் முழுவதும் உள்ள 119 நாடுகள் இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாகவும், அதிகளவில் பட்டினியால் வாடுவோரைக் கொண்ட நாடாகவும் 100-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியா, வங்கதேசம் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் கூட இந்தப் பட்டியலில் இந்தியாவை விட முன்னேறி உள்ளன.
ஆசிய நாடுகளின் பட்டியலில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் முறையே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை உள்ளன.
பட்டினியால் வாடுவோர் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2017-ல் 31.4 புள்ளிகளோடு இந்தியா தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் நம்முடைய அண்டை நாடுகளில் பலவற்றில், நம்மை விட பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன.
குறிப்பாக சீனா (29-வது இடம்), நேபாளம் (72), மியான்மர் (77), இலங்கை (84) மற்றும் வங்கதேசம் (88) ஆகியவை இதில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் பாகிஸ்தான் (106) மற்றும் ஆப்கானிஸ்தான் (107) ஆகிய நாடுகள் மட்டும் இந்தியாவை விடப் பின்தங்கி உள்ளன.
பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியா 93-வது இடத்தையும், ஈராக் 78-வது இடத்தையும் பிடித்துள்ளது.
வரிசை எண் | நாடு | இடம் |
1 | சீனா | 29 |
2 | நேபாளம் | 72 |
3 | மியான்மர் | 77 |
4 | இலங்கை | 84 |
5 | வங்கதேசம் | 88 |
6 | இந்தியா | 100 |
7 | பாகிஸ்தான் | 106 |
8 | ஆப்கானிஸ்தான் | 107 |
பட்டினியால் வாடுவோர் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள உயர் தரவரிசை (100வது இடம்), ஊட்டச்சத்து விவகாரத்தில் நாட்டின் உண்மைத் தன்மையைக் காட்டுகிறது.
5 வயதுக்கும் குறைவான ஐந்து இந்தியக் குழந்தைகளில் 1-க்கும் மேற்பட்ட குழந்தை, தன்னுடைய உயரத்துக்கு ஏற்ற எடையில் இருப்பதில்லை. 3-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் வயதுக்கு ஏற்ற உயரத்தில் இருப்பதில்லை.
இந்தியக் குழந்தைகளின் எடைக் குறைபாட்டு விகிதம் கடந்த 25 ஆண்டுகளில் எந்தவித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படாததைக் காட்டுகிறது''.
இவ்வாறு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் இறப்பு, குழந்தைகளின் வளர்ச்சி (உயரம்) குறைபாடு, குழந்தைகளின் எடை குறைபாடு ஆகிய 4 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT